அணையை பலவீனப்படுத்தும் கேரள அரசின் சதி அம்பலமாகிவிட்டது: ராமதாஸ் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லைப் பெரியாறு அணையை பலவீனப்படுத்தும் கேரள அரசின் சதி அம்பலமாகிவிட்டதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உச்ச நீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணையின் வலிமையை ஆய்வு செய்வதற்காக அணையின் 6 இடங்களில் துளைகள் இடப்பட்டு அதிலிருந்து வல்லுநர் குழுவினர் மாதிரிகளை எடுத்துச் சென்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய ஆய்வு ஏப்ரல் மாதம் முடிவடைந்ததை அடுத்து அணையில் உள்ள துளைகளை அடைப்பதற்காக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முல்லைப் பெரியாறு அணைக்கு சென்றனர்.

அப்போது அவர்களை கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி பணிகளை செய்யவிடாமல் விரட்டியடித்துள்ளனர். கேரள அதிகாரிகளின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு அணை மிகவும் வலிமையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.

இதனால் இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காது என்பதை தெரிந்து கொண்ட கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. ஆய்வுக்காக தோண்டப்பட்ட துளைகளை கேரள காவல் துறை உதவியுடன் பெரிதாக்கினால் அதில் தண்ணீர் தேங்கி அணை வலுவிழந்து விடும் என்பதுதான் கேரள அரசின் திட்டமாகும். இதற்காகவே அணையில் போடப்பட்ட துளைகளை அடைப்பதற்கான பணிகளை கேரள அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். ஏற்கனவே சிலமுறை துளைகளை அடைப்பதற்காக சென்ற தமிழக அதிகாரிகளை கேரள காவல் துறையினர் விரட்டியடித்துள்ளனர். கேரள அரசின் இந்த செயல் உச்ச நீதிமன்ற ஆணையை மீறும் செயலாகும்.

இதற்காக கேரள அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். நீதிமன்ற பார்வையாளர் முன்னிலையில் அணையில் போடப்பட்ட துளைகளை உடனடியாக அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதத்தில் கேரளாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குண்டர்கள் பயங்கர ஆயுதங்களுடன் முல்லைப் பெரியாறு அணைக்குள் நுழைந்து அணையை சேதப்படுத்த முயன்றனர். இப்போது அணையில் போடப்பட்ட துளைகளை அடைப்பதை தடுத்திருப்பதன் மூலம் முல்லைப் பெரியாறு அணையை பலவீனப்படுத்துவதற்கான கேரள அரசின் சதி அம்பலமாகிவிட்டது. அணையை பாதுகாக்க வேண்டிய கேரள காவல் துறையினரும் இதற்கு துணை போயுள்ளனர்.

எனவே கேரள அரசின் சதியை முறியடிக்க, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு பணியிலிருந்து கேரள காவல் துறையை நீக்கி விட்டு அப்பொறுப்பை தமிழக காவல் துறையிடமோ அல்லது மத்திய தொழில் பாதுகாப்பு படையிடமோ ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+