ஹைதராபாத்தில் தொடரும் பதற்றம்- ஜெகனிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை
ஐதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் கடப்பா எம்.பியுமான ஜெகன் மோகன் ரெட்டியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதலமைச்சராக இருந்தபோது அமைச்சர்கள் உதவியுடன் வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக ஜெகன் சொத்து குவித்தார் என்பது சி.பி.ஐ.யின் புகார்.
இந்த புகாரின் பேரில் ஆந்திர மாநில கலால்துறை அமைச்சர் வெங்கட்ரமணா உட்பட 4 பேர் ஏற்கெனவே சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெகனுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஜெகன் நேற்று ஆஜரானார். நேற்று காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஜெகன் கைது செய்யப்படக் கூடும் என்பதால் ஹைதராபாத் நகரில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் ஜெகனிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடையவில்லை.
இதையடுத்து இன்று காலை மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜெகன்மோகன் ரெட்டி ஆஜராகியுள்ளார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications