மாணவர்களுக்கு தபாலில் டிசி அனுப்பிய தலைமை ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஸ்ரீவில்லிப்புத்தூர்: "ஸ்மார்ட் கிளாஸ்" என்ற சிறப்பு வகுப்புக் கட்டணம் செலுத்தாத 50 மாணவர்களுக்கு டிசியை தபாலில் அனுப்பிய விவகாரத்தில் கைதான தலைமை ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் லயன்ஸ் பள்ளியில் கடந்த ஆண்டு ஸ்மார்ட் கிளாஸ் கட்டணமாக ஒரு மாணவருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் வகுப்புகள் நடைபெறவில்லை. கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு டிசி வழங்கி விடுவதாக தலைமை ஆசிரியர் மிரட்டினார். இதனால் கொதிப்படைந்த மாணவர்களின் பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்திடம் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களிடம் வசூலித்த ரூ.85 லட்சத்தை திருப்பி தருவதாக தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஓப்புக் கொண்டார்.
ஆனால் அதன்படி பணத்தை ஒப்படைக்கவில்லை. இந்நிலையில் ஸ்மார்ட் கிளாஸ் கட்டணம் செலுத்தாத 50 மாணவர்களுக்கு டிசியை தபால் மூலம் ராஜேந்திரன் அனுப்பினார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் ராஜேந்திரனை கடந்த 24ந் தேதி போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மாணவர்களின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கபப்ட்ட நிலையில் தலைமை ஆசிரியரின் ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.












Click it and Unblock the Notifications