உ.பி. சட்டசபையில் பகுஜன் சமாஜ் கடும் அமளி: ஆளுநர் மீது பேப்பர் பால் வீச்சு!
லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்த பின் முதன்முறையாக இன்று சட்டமன்றம் கூடியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஆளுநர் பி.எல்.ஜோஷியை உரை நிகழ்த்த விடாமல் பகுஜன் சமாஜ் கட்சியினர் தடுத்தனர்.
ஆளுநர் உரையின் தாள்களை கிழித்து எறிந்து, பேப்பர் பால்களை செய்து அதை ஆளுநர் மீதேன வீனர். மேலும் மேஜைகளின் மீது ஏறி நின்று பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் அவர்கள் அவையின் மையப் பகுதியில் கூடவே, அவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி ஆளும் சமாஜ்வாடி கட்சியினரும் அங்கு குவிந்தனர். இதனால் பெரும் பதற்றம் நிலவியது. இந்த அமளியில் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு சிலர் கீழே விழுந்தனர்.
இதையெல்லாம் சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் அகிலேஷ் யாதவ். நிலைமை கட்டுமீறி போனதையடுத்து அவையை நாளை பிற்பகல் வரை சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
நிதித்துறையை தன் வசம் வைத்துள்ள அகிலேஷ் தான் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இன்று சட்டசபையில் தனது கட்சியினர் நடந்து கொண்ட விதத்தை ஆதரித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இது குண்டர்களின் ராஜ்ஜியம். இவர்களது கையில் ஆட்சி சிக்கி மாநிலம் பாதாளத்துக்குப் போவதை அனுமதிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications