இந்திய விண்வெளி திட்டங்கள் முடக்கம்-மாதவன் நாயர் குற்றச்சாட்டு!
கன்னியாகுமரி: இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஷ் மிஷன், சந்திராயன்-2, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் போன்ற திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆண்ட்ரிஸ்-தேவாஸ் மல்டி மீடியா ஒப்பந்தம் தொடர்பாக என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் அபாண்டமானவை. இஸ்ரோ நிறுவனத்துக்காக நேர்மையாக உழைத்த எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு பழி வங்கிவிட்டனர்.
இந்திய விண்வெளி ஆய்வில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. திட்டப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல புதிய திட்டங்களுக்கு அரசிடம் ஒப்புதல் பெறுவதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர்.
இந்திய விண்வெளி ஆய்வுத்துறையின் முக்கிய திட்டங்களாக மார்ஸ் மிஷன், சந்திராயன்-2, விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது உள்ளிட்ட திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. மத்திய அரசு சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் ஆலோசனை கூட்டம் நடத்தாமல் விடுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
மாதவன் நாயரின் குற்றச்சாட்டு இந்திய விண்வெளி ஆய்வுத்துறையில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications