சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!

பெட்ரோல் விலை உயர்வைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல், டீசல் வாங்கினர். மணிக் கணக்கில் நீண்ட வரிசையில் நின்று நேரத்தை வீணடிக்க விரும்பாத பலர் வாகனங்களை விட்டுவிட்டு மாநகர பேருந்துகளில் அலுவலகம் சென்றனர். இதனால் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்தது.
ஆனால் மாநகரப் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது. இந்த திடீர் கூட்டத்தால் மாநகரப் பேருந்துகளில் கடந்த 21ம் தேதி ரூ.2 கோடியே 80 லட்சமும், 28ம் தேதி ரூ. 2 கோடியே 99 லட்சத்து 8, 600 வசூல் ஆனது. காணும் பொங்கல் அன்று மாநகரப் பேருந்துகளின் வருவாய் ரூ.3 கோடியாக இருந்தது. தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் வருவாய் ரூ.3 கோடியைத் தொட்டுள்ளது. நேற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் நேற்றைய வசூலும் ரூ.3 கோடியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் 3,222 மாநகரப் போருந்துகள் ஓடுகின்றன. அவற்றின் தினசரி வசூலை ரூ.2 கோடியே 84 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் பெட்ரோல் தட்டுப்பாட்டால் மாநகரப் பேருந்துகள் இலக்கை அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications