7-ம் வகுப்பு படித்த வாலிபரை காதல் மணம் செய்த எம்.பி.ஏ.மாணவி: போலீசில் தஞ்சம்
தர்மபுரி: தர்மபுரியில் எம்.பி.ஏ படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவர் 7 ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள வாலிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். பெண்ணின் பெற்றோர்களின் எதிர்ப்பு அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கோரி காதல் தம்பதியர் தர்மபுரி போலீசில் தஞ்சமடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ளது நார்த்தம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகன் பாண்டித்துரை (27). 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் கிருஷ்ணகிரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பாலன் என்பவரிடம் கட்டிடங்களுக்கு கான்கீரிட் போடும் முட்டு அடிக்கும் பணி செய்து வந்தார்.
அப்போது கல்லூரியில் படித்த பாலனின் மகள் புஷ்பவள்ளிக்கும் பாண்டித்துரைக்கும் இடையே காதல் உருவானது. இதையறிந்த பாலன், பாண்டித்துரையை வேலையில் இருந்து நீக்கி விட்டார். எனினும் பாண்டித்துரை தனியாக அதே வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில் புஷ்பவள்ளியை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி..ஏ சேர்த்து விடுதியில் தங்கி படித்து வருகிறார். இருப்பினும் பாலன் – புஷ்பவள்ளி இடையே காதல் தொடர்ந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய மாணவி புஷ்பவள்ளி நேராக தனது காதலனை பார்க்கச் சென்றார். பின்னர் அவர்கள் அரூரில் உள்ள பாண்டித்துரையின் குல தெய்வ கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோவைக்கு சென்று பின்னர் சென்னைக்கு சென்று விட்டனர்.
ரகசிய திருமணம் பற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை பாலன் அடியாட்கள் சிலருடன் சென்று பாண்டித்துரை குடும்பத்தை மிரட்டினார். இதுப்பற்றி தெரியவந்ததும் காதல் புது மண ஜோடியினர் இன்று தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் தேவிகாராணி விசாரணை நடத்தி வருகிறார்.