சுக்கிரன் கோவில் கணக்குகளை கேட்ட நித்யானந்தா சீடர்களை அடித்து விரட்டிய பொதுமக்கள்!

கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில் (சுக்கிரன் கோவில்) மதுரை ஆதீன மடத்திற்குச் சொந்தமானது. இந்தக் கோவிலுக்கு நேற்று நித்ய ஹம்சானந்தா (வயது 29), நித்ய பரமானந்தா (வயது 31) ஆகிய இருவரும், ஆதீனத்தைச் சேர்ந்த சிலரும் வந்துள்ளனர்.
கோவிலுக்கு வந்த அவர்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கோவில் கணககு் வழக்கு விவரங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். அதற்கு ஊழியர்கள் தர முடியாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நித்தியானந்தாவி்ன் ஆட்கள் கோவில் அருகே உள்ள விருந்தினர் இல்லத்துக்குப் போய் விட்டனர்.
இந்த நிலையில் நித்தியானந்தாவின் ஆட்கள் வந்துள்ள தகவல் கஞ்சனூர் கோவில் மீட்புக் குழுவினருக்குப் போனது. அவர்கள் விருந்தினர் இல்லத்துக்கு விரைந்து வந்தனர். உடனே இங்கிருந்து போகுமாறு இருவரிடமும் கூறினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. அப்போது நித்தியானந்தாவின் ஆட்கள் இருவரும தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
பின்னர் திருப்பனந்தாள் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில், சிலரின் தூண்டுதலின் பேரில் கிராம மக்கள் எங்களை அடித்து விரட்டினர். இதில் 1 லட்சம் ரூபாய், செல்போன் ஆகியவை காணவில்லை. எங்களை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் இருவரும் உள் நோயாளிகளாக சேர்ந்து கொண்டனர்.
புகாரைப் பெற்ற போலீஸார், கிராம உதவியாளர் தங்க நடராஜன், பிரபு, மணிகண்டன், காசி முருகன் மற்றும் தாக்குதலுக்கு தூண்டியதாக தருமபுரம் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடம் அதிபர், ஒன்றிய திமுக துணைச் செயலர் அண்ணாதுரை ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதேபோல கண்ணையன் என்பவர், அடையாளம், பெயர் தெரியாத நித்யானந்தரின் சீடர்கள் இருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையும் பெற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மதுரை ஆதீனம், நித்தியானந்தா வருகை
சீடர்கள் இருவர் தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் நித்தியானந்தா கும்பகோணம் வந்தார். அவருடன் மதுரை ஆதீனமும் வந்தார். நித்தியானந்தாவையும் தாக்குவோம் என கோவில் மீட்புக் குழுவினர் அறிவித்திருந்ததால் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டிருந்தனர்.
போலீஸார் புடை சூழ அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரும் அங்கு அடி வாங்கி அனுமதிக்கப்பட்டிருந்த இருவரையும் பார்த்து நலம் விசாரித்தனர்.
பின்னர் வெளியே வந்த நித்தியானந்தா ஆயிரம் சீடர்கள் போனாலும் சரி, ஆதீனச் சொத்துக்களை மீட்காமல் விட மாட்டோம் என்று கோபத்துடன் கூறினார்.
இன்றும் நித்தியானந்தாவும், மதுரை ஆதீனமும் கஞ்சனூரிலேயே தங்கியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications