வகுப்பறையில் ஆசிரியை கொலை... மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!
சென்னை: சென்னையில் வகுப்பறையில் ஆசிரியை உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் தரப்பு சாட்சிகளான 5 மாணவர்கள் கோர்ட்டில் வாக்குமூலம் அளித்துள்ளனர். அப்போது தன் மீதான குற்றச்சாட்டை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள மாணவன் மறுத்துள்ளான்.
சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் உமா மகேஸ்வரி. இவர் தனது வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் சரியாக படிக்கவில்லை என்பதற்காக திட்டியதால் ஆத்திரமடைந்த அந்த 9ம் வகுப்பு மாணவன் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி வகுப்பறையில் வைத்தே ஆசிரியை உமாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்தான்.
சம்பந்தப்பட்ட மாணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த மையத்தில் அனுமதிக்கப்பட்டான். பின்னர் ஜாமீனில் வெளியே விடப்பட்டான். தற்போது இந்த வழக்கு கெல்லீஸில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மாஜிஸ்திரேட் ஜெயந்தி முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் 5 மாணவர்கள் உள்பட 100 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 மாணவர்களும் மாஜிஸ்திரேட் ஜெயந்தியிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவர் கொலையை எப்படிச் செய்தார் என்பது குறித்து இவர்கள் வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட மாணவரும் நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டார். அப்போது அந்த மாணவர் தான் கொலையே செய்யவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications