சதாமின் எழுத்துக்களை வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிட மகள் திட்டம்!
ஈராக் நாட்டில் அரை நூற்றாண்டுகாலம் சர்வாதிகாரியாக திகழ்ந்தவர் சதாம் ஹுசேன். அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய சதாம் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டார். சதாம் தனது நினைவுகள் அனைத்தையும் கைப்பட டைரி ஒன்றில் குறித்து வைத்துள்ளார். கவிதைகள், கடிதங்கள் போன்றவைகளும் அவர் எழுதியுள்ளார்.
இந்த எழுத்துக்களை அவரது மூத்த மகள் ரகத் புத்தகமாக வெளியிட திட்டமிட்டுள்ளார். தற்போது ஜோர்டானில் வசித்து வரும் அவர், என் தந்தை எழுதியுள்ளவை அனைத்தும் உண்மையான நினைவுகள் என்று கூறியுள்ளார். அவரது நினைவுகளை உலகறியச்செய்வது மகளாகிய எனது கடமை என்று குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ரகத் ஏற்கனவே 2009 ம் ஆண்டு சதாமின் வக்கீல் மூலமாக ‘சதாம் ஹுசேன் ஆன் அமெரிக்கன் செல்’ என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார். தற்போது தனது தந்தை கைப்பட எழுதிய குறிப்பினையும் கவிதைகளையும் வாழ்க்கை வரலாறு புத்தகமாக விரைவில் வெளியிட வெளியீட்டாளரை தேடி வருவதாக அல் அரேபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சதாம் ஹுசேன் ஏற்கனவே நான்கு நாவல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகத்தின் கணவரும், கணவரின் தம்பியும் சதாமின் ஆட்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.