உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது- 6 பேர் பலி
ஜான்பூர்(உத்தர பிரதேசம்): உத்தரப் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஹெவுராவில் இருந்து டெராடூன் செல்லும் டூன் எக்ஸ்பிரஸ் ரயில்(13009) இன்று மதியம் 1 மணி அளவில் உத்தர பிரதேசம் மாநிலம் மிஷ்ரவன் ரயில் நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.
ஜான்பூர் ஜங்ஷனை நெருங்கிய நிலையில் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த எஸ்-6, 7,8,9 மற்றும் எஸ்.இ.-1 ஆகிய 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. இதில் ரயிலில் பயணித்த அனைவரும் இங்கும் அங்குமாக தூக்கிவீசப்பட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 4 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் சம்பவ இடத்தில் இருந்த மீட்பு பணியில் ஈடுபட்ட குழுவினர் 6 பேரை இறந்த நிலையில் மீட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோரை காயமடைந்த நிலையில் மீட்டதாகவும் கூறினர். மீட்புக் குழுவினருடன், உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து ஏற்படும் முன் ரயில் மிக வேகமாக சென்று கொண்டிருந்ததாக, ரயிலில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் இதே இடத்தில் நடைபெற்ற ஒரு ரயில் விபத்தில் 24 பேர் பலியானது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications