'சர்ச்சை புகழ்' ராணுவத் தளபதி வி.கே. சிங் இன்று ஓய்வு: ஆனால்.. விசாரணை ஆரம்பம்!
டெல்லி: தனது பதவிக் காலத்தின் கடைசி சில மாதங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் இன்று (மே 31) ஓய்வு பெற்றார்.
62 வயதாகும் சிங், ராணுவத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கிழக்கு பிராந்திய கமாண்டராக உள்ள ஜெனரல் விக்ரம் சிங், புதிய ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்றார். அவர் இந்தப் பதவியில் 2 ஆண்டுகள் 3 மாதங்கள் இருப்பார்.
2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பொறுப்பேற்றார். நேர்மையான அதிகாரியான அவர், முதலில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். ராணுவ செயலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஜெனரல் அலுவலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1951 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அவர் ஓய்வு பெறும் வயது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே அவர் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசு சொல்ல, அடுத்த ஆண்டு தான் எனக்கு உண்மையான ரிடையர்மென்ட் ஏஜ் என்று பிடிவாதம் பிடித்தார் சிங். ஆனாலும் கடைசியில் அரசு சொன்னது போல இன்று ஓய்வு பெற்றார்.
இதையடுத்து ராணுவத்தின் வலிமை குறித்து பிரதமருக்கு இவர் எழுதிய ரகசிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அடுத்ததாக தரக்குறைவான டாட்ரா கவச வாகனங்களை ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் ரூ. 14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சிங்.
இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையே தனது பதவிக் காலத்தின் கடைசி நாட்களைக் கடந்த சிங் இன்று ஓய்வு பெற்றுள்ளார்.
இந் நிலையில் தேஜிந்தர் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய வி.கே. சிங் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி உத்தரவிட்டுள்ளார்.
இதன்மூலம் தங்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய வி.கே.சிங்கை ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருக்க விடாமல் சட்டச் சிக்கல்களில் இழுத்துவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
புதிய தளபதியாக விக்ரம் சிங் பதவியேற்பு:
வி.கே. சிங் ஓய்வு பெற்றதையடுத்து இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் விக்ரம் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விக்ரம் சிங்குக்கு சுர்ஜீத் கெளர் என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications