கன்னியாகுமரியில் 6 பஸ்கள் உடைப்பு- மறியலில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் கைது

இந்த மாவட்டத்தில் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் வழக்கம் போல் ஓடின. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. இடதுசாரி மற்றும் பாஜக தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோக்கள் மட்டுமே ஓடவில்லை.
பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி 6 இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடந்தன. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற கேரள அரசு பஸ் மீது மார்த்தாண்டம் அருகே கல் வீச்சு நடந்தது.
அதே போல நாகர்கோவிலில் இருந்து தேங்காய்பட்டினம் சென்ற தமிழக அரசு பஸ், பார்வதிபுரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற அரசு பஸ், குலசேகரத்தில் இருந்து திருவட்டார் சென்ற அரசு பஸ், மினி பஸ் உள்பட 6 பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகின. இதில் ஒரு பஸ்சின் டிரைவர் காயமடைந்தார்.
புதுக்கடை இனயம் திருப்பு என்ற இடத்தில் 2 அரசு பஸ்களை மறித்து பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் விரைந்து வந்து அவர்களை கைது செய்தனர்.
சென்னையில் மறியல்-இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் கைது:
சென்னை அண்ணா சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவருடன் நூற்றுக்கணக்கான பாஜகவினரும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லையில்...
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நயில் நிலையம் முன்பும், பாஜகவினர் பஸ் நிலையம் முன்பும் மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூரில்..
திருவாரூர் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டியில் எம்.எல்.ஏ கைது...
அதே போல திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற எம்.எல்.ஏ உலகநாதன் உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலையில்...
கரூர் மாவட்டம் குளித்தலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தாம்பரம் ரயில் நிலையத்தில்...
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் காஞ்சீபுரம் மாவட்ட பாஜகவினர் 40 பேர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழியாக கடற்கரைக்கு சென்ற மின்சார ரயில் நிறுத்தப்பட்டது. ரயில்வே போலீசார் அனைவரையும் கைது செய்து ரயில் போக்குவரத்தை சீர் செய்தனர்.
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வந்த மின்சார ரயிலை மறித்து கோஷமிட்டனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல்லில் ரயில் மறியல்:
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்சியின் மாதர் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்பினர் குருவாயூர் - திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ரயில் 30 நிமிடங்கள் தாமதமாகச் சென்றது.












Click it and Unblock the Notifications