சமமான ஊதியம், சமமான பணி நேரம்.. ஏர் இந்தியா வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா?

டெல்லியில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அஜித்சிங் கூறியதாவது:
தர்மாதிகாரி கமிட்டி அறிக்கையினாது இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா நிறுவன பணியாளர்களுக்கு சமமான ஊதியம், சமமான பணிநேரம் நிர்ணயிக்கப்படும். மூத்த பணியாளர்கள், இளநிலை பணியாளர்களைவிட நிச்சயம் குறைவான ஊதியம் பெறமாட்டார்கள். தற்போதைய துறைசார் நிலவரப்படி விமானிகளுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பரிந்துரைத்துள்ளது. இது அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.
இருப்பினும் விமானிகள் தங்களது ஒரு மாத கால வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும். நிபந்தனையின்றி பணி நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.
தமாதிகாரி கமிட்டி
அரசு விமான நிறுவனங்களான ஏர் இந்தியாவும் இந்தியன் ஏர்லைன்ஸும் ஒன்றாக்கப்பட்டு ஏர் இந்தியாவாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இரண்டு நிறுவனங்களையும் இணைத்ததில் பல்வேறு நிர்வாக ரீதியான சிக்கல்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து நீதிபதி தர்மாதிகாரி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு தமது அறிக்கையை கடந்த ஜனவரி 31-ந் தேதியன்று அரசிடம் சமர்ப்பித்தது.
இதனிடையே ட்ரீம்லைனர் விமானத்தை இயக்குவதில் ஒருபிரிவு விமானிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் இன்னொரு பிரிவு விமானிகள் ஒரு மாத காலமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமானிகளை சமாதானப்படுத்தும் வகையில் தர்மாதிகாரி கமிட்டி அறிக்கையை செயல்படுத்துவோம் என்று அரசு கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வருமா? என விரைவில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications