பீகாரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக பீகாரில் இருந்து ஒரு சிறுபெண் போனில் தகவல் தெரிவி்த்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் வெடிகுண்டு சோதனையின் முடிவில், அந்த அழைப்பு புரளி என்று தெரியவந்தது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள கால்சென்டருக்கு நேற்று நள்ளிரவில் பீகாரில் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. இதில் இந்தியில் பேசிய ஒரு சிறுமி சென்னை விமான நிலையத்தில் உள்ள வெடிகுண்டு வெடிக்கும் என்று தெரிவித்துவிட்டு போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதில் அதிர்ச்சியடைந்த விமான நிலைய ஊழியர்கள், விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து விமான நிலையம் முழுவதும் சோதனையிட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. விமான நிலையத்தில் நடந்த சோதனையின் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனையடுத்து போனில் தெரிவிக்கப்பட்ட தகவல் புரளி என்பது தெரியவந்ததால், விமான நிலையத்தில் பரவிய பரபரப்பு அடங்கியது. போலீசாரின் விசாரணையின் போது, பீகாரில் இருந்து அழைத்த அதே எண்ணிற்கு மீண்டும் அழைத்து விசாரித்தனர்.
அப்போது போனில் பேசிய ஒரு பெண், தனது குழந்தை செல்போனை எடுத்து தவறுதலாக பேசியதாகவும், அதற்கு மன்னிக்குமாறு கூறினார். அதை நம்ப மறுத்த போலீசார், சென்னை விமான நிலையத்திற்கு போனில் அழைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications