பெட்ரோல் விலை உயர்வு: திருச்சியில் விஜயகாந்த் இன்று ஆர்ப்பாட்டம்!
சென்னை: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தியா முழுவதும் நேற்று பாரத் பந்த் நடைபெற்றது. தமிழகத்தில் நேற்று அதிமுக தரப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் தேமுதிக சார்பில் திருச்சி ரயில்வே நிலையம் அருகே இன்று காலை 11 மணி அளவில் பெட்ரோல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும்.
இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும், கட்சி சார்பு அணி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொது மக்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார்.