கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் - தமிழகம் முழுவதும் கோலாகலமான ஏற்பாடுகள்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் வரும் 3-ந் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிறந்தநாளன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அதன் பின்னர் வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் செல்லும் கருணாநிதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். கருணாநிதி நிறைவுரை நிகழ்த்துகிறார். இது தவிர தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள்.
கடந்த ஆண்டு கருணாநிதியின் மகளும் எம்.பியுமான கனிமொழி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிறையில் இருந்ததால் ஏகத்துக்கும் அப்செட்டாகி இருந்தார் கருணாநிதி. இம்முறை கனிமொழியும் வந்துவிட்டார்.. கருணாநிதியின் தகத்தகாய சூரியனான ஆ. ராசாவும் ஜாமீனில் வந்துவிட்டார். இருப்பினும் ஸ்டாலின் மற்றும் அழகிரி இடையே உச்சகட்ட உள்குத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கருணாநிதியின் 89-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எத்தனை உள்குத்து களேபரங்கள் காத்திருக்கின்றனவோ?












Click it and Unblock the Notifications