புதுக்கோட்டை இடைத்தேர்தல்: தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனை ஆதரித்து ஜி.ராமகிருஷ்ணன் பிரச்சாரம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்லில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவிற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது.
இந்த நிலையில் சி.பி.எம். கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை செய்தியாளர்களிடம் கூறியதாவது
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜாகீர்உசேனின் வெற்றிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்ய உள்ளனர். வரும் 2ம் தேதி மாநில செயற்குழு உறுப்பினரும், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைக்கிறார்.
வரும் 4ம் தேதி நாகை சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலியும், 5ம் தேதி மாநிலக் குழு உறுப்பினரும், மதுரை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ரா.அண்ணாத்துரை ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர்.
வரும் 6ம் தேதி சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், வரும் 7ம் தேதி கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., 8ம் தேதி கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலபாரதி ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் செய்கின்றனர் என்றார்.