தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கும்- வானிலை ஆய்வு மையம்
சென்னை: இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்னதாகவே (மே 4ம் தேதி) துவங்கிய அக்னி நட்சத்திரம் படிப்படியாக உயர்ந்து, தமிழக மக்களை பாடாய்படுத்திவிட்டது. சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 112 டிகிரி வரை வெயில் அடித்தது. மேலும் வேலூர், மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஓட்டியே வெப்பம் நிலவியது.
இதனால் வெயிலுக்கு பயந்த பொதுமக்கள் மதிய நேரங்களில் வெளியே வருவது வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் கடந்த 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிந்தது. ஆனால் தமிழகத்தில் வெப்ப காற்று வீசி வந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டின் தென் மேற்கு பருவ மழை கேளராவில் வரும் 5ம் தேதி முதல் துவங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில் வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவமழையால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, ஊட்டி, கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும்.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது,
தென்மேற்கு பருவமழை வழக்கமாக மே இறுதியிலோ அல்லது ஜூன் 1ம் தேதி பெய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக 5ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கேரளாவில் மழை பெய்தால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து சீசன் துவங்கும் என்றனர்.












Click it and Unblock the Notifications