2 ஆண்டுகளாக கோமாவில் இருந்த மகனை கொன்று இன்ஸ்பெக்டர் தற்கொலை
மதுரை: விபத்தில் சிக்கி கடந்த 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த மகனை கொலை செய்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரையில் தான் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் விவேகானந்தன்(60). தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு தமிழரசி என்ற மனைவியும், விக்னேஸ்வரன் என்ற மகனும் இருந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரனும், தமிழ்செல்வி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த விக்னேஸ்வரன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கினார். அதில் அவரது தலையில் பலத்த காயமடைந்தார்.
இதில் சுயநினைவை இழந்த விக்னேஸ்வரன், கோமா நிலையில் இருந்தார். மகனின் பரிதாப நிலையை கண்ட தமிழரசி கடந்த ஆண்டு மாரடைப்பால் இறந்தார். ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் மகனின் உடல்நிலையில் முன்னேற்றம் அடையாமல் போகவே, விவேகானந்தன் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார்.
மனைவியை இழந்தது ஒருபுறம், மகனை காப்பாற்ற முடியாதது இன்னொரு புறம் என்று மனமுடைந்த விவேகாந்தன், நேற்று முன்தினம் இரவு கோமாவில் இருந்த மகனுக்கு விஷத்தை கொடுத்து கொலை செய்தார். மகனின் இறப்பை உறுதி செய்த பிறகு, வீட்டின் அருகில் இருந்த வேப்பமரத்தில் விவேகானந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். இரு உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.