தமிழகத்தில் களை இழந்த கருணாநிதி பிறந்தநாள் விழா!

திமுக தலைவர் கருணாநிதியின் 89வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். திமுக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு முன்பு கூடி மேள, தாளங்கள் முழங்க வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் மத்திய அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரில் இருந்து போன் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் வழக்கமாக அவரை சந்திக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொழில் அதிபர்கள் பலர் அவரை சந்தித்து வாழ்த்தவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து திமுக முன்னணி நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
திமுக தலைவர் கருணாநிதி கட்சி தலைவர் பதவியை பெரிதும் விரும்புவர். முதல்வர் பதவியை அவ்வளவாக விரும்ப மாட்டார். ஆனால் கருணாநிதி முதல்வராக இருந்த போது வந்த பிறந்தநாளின்போது திமுக முக்கிய நிர்வாகிகள் அண்ணா சாலையிலும், முக்கிய சாலைகளிலும் நீண்ட பிளக்ஸ் பேனர் வைத்தனர். முக்கிய பகுதிகளிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கட்சி அலுவலகங்களிலும் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் போட்டோவுக்கு போஸ் கொடுக்க பெரிய அடிதடியே நடக்கும் என்றார்.
ஆனால் இம்முறை அது போன்ற பெரிய அளவு பிளக்ஸ் பேனர்கள் இல்லை. வழக்கமாக உள்ள உற்சாகம் இல்லை. முக்கிய கட்சி பதவிகளில் உள்ளவர்கள் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்பு போல தடபுடலாக கொண்டாடினால் எங்கே தங்கள் மீதும் வழக்கு பாயந்துவிடுமோ என மெளனம் காத்து வருகின்றனர்.
இதனால் சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டுமே கருணாநிதியின் பிறந்த நாள் விழா ஓரளவு களைகட்டியது. மற்ற பகுதிகளில் பெரிய அக்கறை ஏதும் இன்றி காணப்பட்டது.
இதை தலைவர் கருணாநிதி சிரத்தை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தால் அவர் மீது விசுவாசமாக உள்ள கட்சி நிர்வாகிகளை அடையாளம் காண முடியும். அதே போல் கட்சி பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதித்த துரோகிகளையும் அடையாளம் காண முடியும். இவர்கள் தான் இப்படி என்றால் தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுவை போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மிகப் பெரிய தொழில் அதிபர்களும் பதுங்கிக் கொண்டனர் என்கின்றனர் திமுகவினர்.
இது குறித்து திமுக தரப்பில் விசாரித்தால், ஆளும் கட்சியாக யார் உள்ளார்களோ அப்போது, வழக்கத்திற்கு மாறாக பிறந்த நாள் விழா என்ன, எல்லா விழாக்களுமே தடபுலாகவே நடக்கும். எதிர் கட்சியாகிவிட்டால் கட்சி நிர்வாகிகளும், மற்றவர்களும் அடக்கியே வாசிப்பார்கள். அது எல்லாம் அரசியலில் சகஜம். இந்த விஷயம் கடைக்கோடி தொண்டனுக்கு கூட தெரியும். ஆனால் நாங்கள் எப்போதும் போல் எங்கள் தலைவர் கலைஞர் பிறந்த நாளை சிறப்பாகவே கொண்டாடியுள்ளோம் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications