பெட்ரோல் விலை உயர்வு: மக்கள் கசப்பு மருந்தாக ஏற்று கொள்ள வேண்டும்- ப.சிதம்பரம்
காரைக்குடி: பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது, அதே சமயம் தவிர்க்கவும் முடியாது. இதை ஒரு கசப்பு மருந்தாக பொதுமக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
காரைக்குடியில் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. கடந்த பாஜக ஆட்சியின்போது, இந்த விலை 20 அமெரிக்க டாலராக இருந்தது.
இந்த அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாலேயே, பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டியதாகிவிட்டது. மத்திய அரசு மானியமாக, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.31.49, டீசல் லிட்டருக்கு ரூ.17.64, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.480 வழங்குகிறது.
ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கம் நம்மை பாதித்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளன. அன்னிய செலாவணியும் திருப்திகரமாக இல்லை.
ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பாஜக ஆட்சியில் 5.3 சதவீதம் மட்டுமே இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக 9 சதவீத வளர்ச்சியும், கடந்த 5 ஆண்டுகளாக சராசரியாக 8.5 சதவீத வளர்ச்சியும் உள்ளது என்றார் சிதம்பரம்.
மத்திய அரசை குறை கூறுவதா?-ஞானதேசிகன்:
இந் நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வாலும், டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும், அதன் விளைவாக 80 சதவீதம் இறக்குமதி செய்கிற கச்சா எண்ணெய் அதிகமாக விலை கொடுத்து வாங்குவதால் பெட்ரோல் விலை தவிர்க்க முடியாததது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறியது.
இந்த விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், ஆட்டோ ஓட்டுனர்களும் மற்றும் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும் குரல் எழுப்பினர்.
இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாயை குறைப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும் வரி விதிப்பில் மத்திய, மாநில அரசுகள் வரி விதிப்பில் சில மாறுதல்கள் செய்வதன் மூலம் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்.
டெல்லி, கோவாவை போல் 27 சதவீதம் மதிப்பு கூட்டு வரியை பெட்ரோலில் விதிக்கிற மாநில அரசு ஒரு சதவீதம் கூட குறைப்பதற்கு தயாராக இல்லாமல் மத்திய அரசை கண்டித்து அறிக்கை விடுவது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை. மத்திய அரசுக்கு உள்ள கடமையை போல் மாநில அரசுக்கும் அதிகமான கடமைகள் உள்ளது.
மத்திய அரசாவது ஒரு லிட்டர் டீசலுக்கு 14 ரூபாயும், ஒரு சிலிண்டருக்கு 500 ரூபாயும் மானியமாக தந்து மக்களுக்கு முழு சுமையும் போய் சேராமல் தாங்குகிறபோது, 27 சதவீத வரியை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டு மாநில அரசு தன் பங்குக்கு சிறிது கூட குறைக்க மறுப்பதென்பது தவறான செயல்பாடாகும் என்று கூறியுள்ளார்.