ஜெகனுக்கு வலுக்கும் ஆதரவு: கட்சி தாவும் எம்.எல்.ஏக்களால் நூலிழையில் தொங்கப்போகும் காங். அரசு

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை நடத்தி வருகிறார். ஜெகனுக்கு ஆதரவாக ஏற்கெனவே 18 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியிருந்தனர். அந்த இடங்களுக்கு வரும் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தொகுதிகளில் ஜெகன் மோகனுக்கு பெரும் ஆதரவு அலை வீசி வருகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலடைக்கப்பட்டாலும் அவரது தாயாரும் சகோதரியும் வீதியில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் செல்லும் இடம் எல்லாம் மக்கள் வெள்ளம் அலை மொதுகிறது.
இந்த நிலையில் மேலும் எலூரு தொகுதி எம்.எல்.ஏ. அல்ல கிருஷ்ண சீனிவாஸ், பொப்பிலி தொகுதி எம்.எல்.ஏ. சுஜயா கிருஷ்ண ரங்காராவ் ஆகிய இருவரும் நேற்று சபாநாயகரிடம் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். பிறகு அவர்கள் இருவரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக அறிவித்தனர். இதனால் ஆந்திர சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 151 ஆக குறைந்துள்ளது.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ள கொள்ள வேண்டுமானால் 148 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போது 151 எம்.எல்.ஏ.க்களே உள்ள நிலையில் சந்திரசேகர் ரெட்டி, ஜெயமணி என்ற 2 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசில் இருந்து விலகுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் பதவி விலகினால் காங்கிரஸ் கட்சி நூலிழையில்தான் தொங்கிக் கொண்டிருக்க முடியும். இந்த நிலைமையும் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்பதால் எந்த நேரத்திலும் ஆந்திர மாநில காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்பதால் காங்கிரஸ் தலைவர்கள் கதிகலங்கிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications