தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மீது வழக்கு பதிவு!

புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவருடன் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் சமக மற்றும் அதிமுகவினர் அணி வகுத்து சென்றனர்.
இதேபோல கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில், தேமுதிக வேட்பாளர் ஜாஹிர் உசேனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவருடன் 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சி கொடியுடன் தேமுதிகவினர் அணி வகுத்து சென்றனர்.
இவை அனைத்தும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியச் செயல் ஆகும். இது குறித்து வீடியோ கண்காணிப்புக் குழு தேர்தல் அலுவலர் ராஜசேகரன், கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தேமுதிக வேட்பாளர் ஜாஹிர் உசேன் ஆகியோர் மீது கறம்பக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications