மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தியோசிக்க வேண்டி வரும்: டெல்லி இமாம் எச்சரிக்கை
டெல்லி: 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தி யோசிக்க வேண்டிய நிலை உருவாகும் என்று சமாஜ்வாடி கட்சிக்கு டெல்லி இமாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து டெல்லி ஷாஹி இமாம் செய்யத் புகாரி கூறுகையில்,
முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள சமாஜ்வாடி கட்சிக்கு கோஸி கலான் கலவரம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முஸ்லிம் மக்கள் பெரும் மன வேதனை அடைந்துள்ளனர். இந்த காரணத்தினால் வரும் 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் மாத்தியோசிக்க வேண்டிய நிலை வரும்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 80 சதவீத முஸ்லிம்கள் சமாஜ்வாடி கட்சிக்கு தான் வாக்களித்தார்கள். அதை இப்பொழுது நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்த வாக்குகள் வீணாகிவி்ட்டது என்பதே எனது கவலை. அரசு வலுவான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் கலவரத்தை தடுத்திருக்கலாம்.
அது மட்டும் அல்ல அகிலேஷ் யாதவ், முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கலவரம் பாதித்த பகுதிகளை பார்வையிடவில்லை என்று குற்றம் சாட்டினார்.
கடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கும், முலாயம் சிங்கிற்கும் வாக்கு சேகரிக்க நேரடியாக களத்தில் இறங்கியவர் ஷாஹி இமாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத காரணங்களுக்காக வைக்கப்பபட்டிருந்த தண்ணீரை அந்த வழியாகச் சென்றவர் பயன்படுத்தியதால் கோஸி கலானில் கடந்த வெள்ளிக்கிழமை கலவரம் வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர், 16 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.