மாவோயிஸ்டுகளிடம் இருப்பது வில்லும் அம்பும் மட்டுமல்ல.. ராக்கெட் லாஞ்சர்களுமாம்!
டெல்லி: நாட்டின் நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாவோயிஸ்டுகளிடம் இப்பொழுது ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களும் இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
மாவோயிஸ்டுகள் வனப்பகுதியில் பழங்குடியினரின் ஆதரவுடன் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதுவரை இல்லாத வகையில் மாவோயிஸ்டுகளிடம் அதிநவீன சொகுசு ஆயுதங்களும் குவியத் தொடங்கியிருக்கின்றன. ராக்கெட் லாஞ்சர்களை அவர்களே தயாரித்தும் வைத்திருக்கின்றனர். இந்த ஆயுதங்கள் நாட்டின் துணை ராணுவத்தை மட்டுமல்ல.. ராணுவத்தையே எதிர்த்துப் போரிடும் வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ராக்கெட் லாஞ்சர்கள் தயாரிப்புக்காக மட்டும் கடந்த 12 ஆண்டுகளாக ரூ40 கோடி அளவில் செலவு செய்திருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். கடந்த ஆண்டு மாவோயிஸ்டுகளின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அன்னா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளின் அதிநவீன ஆயுதங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
மொத்தம் 8 ஆயிரம் ராக்கெட் லாஞ்சர்களை மாவோயிஸ்டுகள் தயாரித்து வைத்திருப்பதாகவும் ஆனால் அவற்றின் தரம் சந்தேகத்துக்குரியது என்றும் கூட அன்னா கூறியிருக்கிறார்.
இருப்பினும் இதுவரை மாவோயிஸ்டுகள் மறைவிடங்களில் இருந்து பெரிய அளவிலான ராக்கெட் லாஞ்சர்கள் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.