மதுரை அருகே லாரி மீது பஸ் மோதி தாய், மகன் உட்பட 4 பேர் பலி-35 பேர் காயம்
மதுரை: மதுரை அருகே லாரி மீது அரசு பஸ் மோதிய விபத்தில், தாய், மகன் உட்பட 4 பேர் பலியாகினர். மேலும் பஸ் இடிபாடுகளில் சிக்கிய 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு நெல்லைக்கு புறப்பட்ட அரசு பஸ் ஒன்றில் 40க்கும் மேற்பட்ட பணிகள் பயணித்தனர். பஸ்சை தூத்துக்குடியை சேர்ந்த ராஜேந்திரன் (52) ஓட்டி வந்தார். பஸ் நடத்துநராக விஜயன் இருந்தார். அந்த பஸ் நேற்று அதிகாலையில் 3.30 மணியளவில் மதுரையை வந்தடைந்தது. அதன்பிறகு அங்கிருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் காலை 4.30 மணி அளவில் திருமங்கலத்தை அடுத்த சிவரக்கோட்டை அருகே பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் கரூரிலிருந்து நெல்லைக்கு, சிமென்ட் மூட்டை ஏற்றிச் சென்ற லாரி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் நடத்துநர் விஜயன், கோவில்பட்டியை சேர்ந்த கிருஷ்ணவேணி(27), அவரது மகன் ஸ்ரீதரன்(3), மற்றும் சாந்தி(35) ஆகியோர் இறந்த நிலையி்ல் மீட்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த பார்வதி, சின்ன முனியாண்டி, பரமேஸ்வரி, குமார், செல்லகுட்டி உள்பட 35 பேர் சிகிச்சைக்காக மதுரை மற்றும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தாசில்தார் மோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த கள்ளிக்குடி இன்ஸ்பெக்டர் சுபகுமரன் விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications