பொதுப்பிரிவினருக்கான பி.இ. கவுன்சிலிங் ஜூலை 13ல் துவக்கம்: மன்னர் ஜவஹர்
சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி துவங்குகிறது.
இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 2ம் தேதிக்கு பதில் 5ம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஜூலை 13ம் தேதியும் துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங் குறித்து முடிவு செய்ய அண்ணா பல்கலைக்கழக நிர்வாக கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர், மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஜூலை 13ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து மன்னர் ஜவஹர் கூறுகையில்,
2012-13ம் ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் சேர 2 லட்சத்து 29,000 பேர் விண்ணப்பம் பெற்றனர். இதுவரை 1 லட்சத்து 70,000 பேர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். தபால் மூலம் மேலும் 15,000 விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விண்ணப்பித்தவர்களின் பட்டியலை இன்னும் இறுதி செய்யவில்லை. பொறியியல் கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 5ம் தேதி துவங்குகிறது. ஜூலை 5ம் தேதி விளையாட்டுத் துறை பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்குகிறது. ஜூலை 7 முதல் 11ம் தேதி வரை தொழில் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 12ம் மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்சிலிங் நடக்கிறது. ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது.
வரும் 25ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. மேலும் வரும் 30ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படுகிறது. விண்ணப்பி்த்துள்ள அனைவருக்கும் நிச்சயம் இடம் கிடைக்கும். ஆகஸ்ட் 14க்குள் கவுன்சிலிங்கை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆனால் தேவைப்பட்டால் கால நீட்டிப்பு செய்வோம் என்றார்.












Click it and Unblock the Notifications