ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியாவில் கணிணி விலைகள் கிடுகிடு உயர்வு

கணிணி தயாரிப்பு நிறுவனங்கள் உதிரி பாகங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன. ரூபாய் மதிப்பு சரிவால் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். சீனாவைச் சேர்ந்த லினோவா நிறுவனம் சென்ற மாதத்தில் கணிணி விலையை 3-5 விழுக்காடு உயர்த்தியது. ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடையும் நிலையில் விலையை மேலும் உயர்த்தக் கூடும்.
தைவான் நாட்டைச் சேர்ந்த ஏசர் நிறுவனமும் கணிணி விலை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவால் கணிணி விலையை உயர்த்தும் நிலைக்கு பல நிறுவனங்கள் தள்ளப்பட்டுவிட்டன.
சென்ற ஓர் ஆண்டு காலத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 விழுக்காடு சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக ஐ.டி. ஹார்டுவேர் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கணிணி நிறுவனங்கள் கணிணி தயாரிக்கப் பயன்படும் பாகங்களில் 85 விழுக்காடு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன.
கணிணி தயாரிப்பு நிறுவனங்கள் தாய்லாந்து நாட்டிலிருந்து உதிரி பாகங்களை அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன் அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தாலும் சப்ளை குறைந்துள்ளது. இதனாலும் ரூ.70,000 கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ள கணிணி ஹார்டுவேர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கணிணி ஹார்டுவேர் சாதனங்கள் மீதான வரியை தற்காலிகமாக குறைக்கும்படி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications