திண்டுக்கல் அருகே விசாரணைக் கைதி மரணம்: உறவினர்கள் சாலை மறியல்
திண்டுக்கல்: விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் மில் தொழிலாளி ராஜா (27). அவரை குற்றப்பிரிவு எஸ்.ஐ. ரமேஷ்கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் ராஜாவை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது அவர் இறந்து விட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து அவரது உடல் வேடசந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை உறவினர் வசம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் ராஜாவை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடுத்தே கொலை செய்து விட்டதாகக் கூறி, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி.ஜெயசந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ராஜா மரணம் குறித்து திண்டுக்கல் டி.எஸ்.பி. நடராஜமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜா திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதால் அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தப்பியோடியபோது கல்தடுக்கி விழுந்து இறந்துவிட்டார் என்றார்.
இந்த நிலையில் ராஜா மரணம் குறித்து மாஜிஸ்திரேட் அருணாசலம் விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி மரணம் அடைந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.