செயற்கை ரப்பர் இறக்குமதி: ரப்பர் விலை வீழ்ச்சி
உலக அளவில் பாங்காக் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட சர்வதேச மார்க்கெட்டுகளில் ரப்பர் விலை சரிவை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் கோட்டயம் மார்க்கெட்டில் ஆர்.எஸ்.எஸ். 4 வகை ரப்பர் கிலோ ரூ.188.50 ஆகவும், ஆர்.எஸ்.எஸ். 5 வகை ரூ.186 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. கொச்சி மார்கெட்டில் ஆர்.எஸ்.எஸ். 4 ரப்பர் கிலோ ரூ.188.50 ஆகவும், ஆர்எஸ்எஸ் 5 வகை ரூ.188.50 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. கோட்டயம், கொச்சி மார்கெட் அடிப்படையில்தான் குமரி மாவட்டத்திலும் ரப்பர் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அண்மையில் ரப்பரின் விலை கிலோ ரூ.217க்கு மேல் அதிகரித்த நிலையில் தற்போது கணிசமாக விலை குறையத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ரப்பர் தேவை 11 லட்சம் டன் வரை உள்ளது. ஆனால் தற்போது ஒன்பதரை லட்சம் டன் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற நாடுகள் பலவற்றில் ரப்பர் உற்பத்தி குறைந்துள்ளது. சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் ரப்பர் உற்பத்தி அதிகம். ரப்பர் விலை தற்போது குறைந்தாலும் இது தற்காலிகம் தான் என்கின்றனர் வியாபாரிகள். இந்தியா அன்மையில் 49,000 டன் சின்தடிக் ரப்பர் எனப்படும் செயற்கை ரப்பரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இதனால் ரப்பர் விலை சற்று குறைந்துள்ளது. இனி மழைக்காலம் வருவதால் ரப்பர் உற்பத்தி குறையும். இதனால் விலை அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.