ஓட்டுப் போட புதுக்கோட்டை வாக்காளர்கள் தயார்-நாளை வாக்குப் பதிவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக போலீஸார் தவிர மத்திய பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்து வந்த சிபிஐ கட்சியின் முத்துக்குமரன் மரணமடைந்ததால், அங்கு இடைத் தேர்தல் வந்துள்ளது.
இத்தேர்தலை திமுக, மதிமுக, பாஜக, பாமக ஆகியவை நிராகரித்து விட்டன. அதிமுகவும், தேமுதிகவும் மட்டும் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலாளர் ஜாகிர் உசேனும் போட்டியிடுகின்றனர்.
இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சில குட்டிக் கட்சிகளும், சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.
நேற்றுடன் பிரசாரம் முடிந்து விட்டது. இன்று ஓய்வு நாள். நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும்.
மொத்தம் 224 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.