நிலக்கோட்டையை அடுத்து திண்டுக்கல் நீதிமன்றத்திலும் ஐ. பெரியசாமி ஜாமீன் மனு தள்ளுபடி!
திண்டுக்கல்: முறையான அனுமதி பெறாமல் கல்குவாரி நடத்தி அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைதான திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் இரண்டாவது ஜாமீன் மனுவை திண்டுக்கல் அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அய்யம்பாளையம் அருகில் குட்டிக்கரடு மலைப் பகுதி உள்ளது. இங்குள்ள கல்குவாரியில் அரசு அனுமதி இன்றி அங்குள்ள கல்லை உடைத்து எடுத்து அரசுக்கு ரூ.30 லட்சம் வரை வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக ஆத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் முரளிதரன் மீது கிராம நிர்வாக அலுவலர் பரஞ்சோதி புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் முரளிதரனை கைது செய்து நிலக்கோட்டை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
முரளிதரன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை நிலக்கோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் நீதிபதி அனுராதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி அவற்றை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து ஐ.பெரியசாமி ஜாமீன் கோரி திண்டுக்கல் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலசுந்தரகுமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications