ரஞ்சிதாவும் வந்ததில்லை,பஜனையும் நடக்கவில்லை-மதுரை ஆதீனம்

இதுகுறித்து மாலைமலருக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் நடந்து வரும் சம்பவங்கள் மிகவும் வருந்ததக்கதாகும். மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமனம் செய்தது முதல் அவர் மீது வேண்டுமென்றே கற்பனை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள்.
யார் எந்த குற்றச்சாட்டுகளை கூறினாலும் என்னை பொறுத்தவரை நித்தியானந்தா நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். எந்த சூழ்நிலையிலும் நான் கூறும் இந்த கருத்துக்களை மாற்றமாட்டேன். நித்தியானந்தா மதுரையில் இல்லாததால் ஆதீன மடத்தில் பூஜைகள் எதுவும் தடைபடவில்லை. வழக்கம் போல அனைத்து பூஜைகளும் செய்து வருகிறோம்.
நித்தியானந்தா சீடர்கள் முறையான ஆன்மிக பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். ஆதீன மடத்தில் அன்னதானம், பூஜைகள், பரிகாரங்கள் நடந்து வருகிறது.
மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனமான நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்று எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து கர்நாடக போலீசார் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
இந்து மக்கள் கட்சியின் சோலைகண்ணன் கற்பனையான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் கூறி உள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் நான் இதுபற்றி அதிகம் கூற விரும்பவில்லை. எனினும் சில கருத்துக்களை கூற விரும்புகிறேன். சோலைகண்ணன் கூறியபடி அவரை ஒருபோதும் நான் ஆதீன மடத்திற்கு அழைக்கவில்லை.
மடத்தில் பஜனை நடந்ததாகவும், அதில் நடிகை ரஞ்சிதா பங்கேற்று இருந்ததாகவும், புனித நீர் கொடுத்தபோது மயக்க நிலையில் ஆபாச நடனங்கள் நடந்ததாக அவர் கற்பனையான, போலியான குற்றச்சாட்டுகளை மடத்தின் மீது சுமத்தியுள்ளார்.
நடிகை ரஞ்சிதா மடத்திற்கு வந்ததில்லை. புலி தோல்கள் விரிக்கப்பட்டு யானை தந்தங்கள் வைத்து அவராக யூகித்து பூஜைகள் நடந்ததாக கூறி உள்ளார். மடத்தில் புலி தோல், யானை தந்தங்கள் உள்ளனவா? என யார் வேண்டுமானாலும் வந்து பார்த்துக்கொள்ளலாம்.
ஆதீன மடத்தை களங்கப்படுத்த யார் முயற்சி செய்தாலும் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி எடுப்போம். சோலைக்கண்ணன் மீது மான நஷ்ட வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications