ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட தந்தை பலி- கையில் இருந்த 2 வயது மகள் பத்திரம்!
டெல்லி: டெல்லி அருகே படு வேகமாக வந்த ரயில் மோதியதில் 25 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால் அவரது கையில் இருந்த அவரது 2 வயது மகள் ரயில் மோதி வேகத்தில் தூக்கி வீசப்பட்டு புதரில் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுன் உயிர் தப்பியுள்ளாள்.
அந்த நபரின் பெயர் ராஜேஷ் தாக்கூர். இவர் ஒரு சவரத் தொழிலாளி. பீகார் மாநிலம் மதுபானியைச் சேர்ந்தவர். புதன்கிழமை இரவு இவர் டெல்லி புறநகர்ப் பகுதியான சமய்பூர் பத்லி என்ற இடத்தில் தனது 2 வயது மகள் பூஜாவுடன் ரயில்வே லைனை கிராஸ் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கல்கா மெயில் ரயில் ராஜேஷ் மீது மோதியது.
மோதிய வேகத்தில் படுகாயமடைந்து விழுந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆனால் ரயில் மோதிய வேகத்தில் அவரது கையில் இருந்த குழந்தை பூஜா தூக்கி வீசப்பட்டு விட்டாள். அவள்அருகில் இருந்த ஒரு புதரில் போய் விழுந்தாள்.
ரயில் ஒருவர் மீது மோதியதைத் தொடர்ந்து ரயில் என்ஜின் டிரைவர் உடனடியாக அருகில் உள்ள பத்லி ரயில் நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக ரயில்வே போலீஸாரும்,ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது புதரில் அழுதபடி கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை என்று தெரிவித்தனர்.லேசான காயங்களே குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது பூஜா பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள். அவளுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.
பலியான தாக்கூருக்கு ரிங்கு தேவி என்ற மனைவியும், பூஜா உள்பட 3 மகள்களும் உள்ளனர். சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரில் அவர் சலூன் கடை வைத்து நடத்தி வந்தார். குடும்பத்தில்இவர் மட்டுமே வேலை பார்த்து வந்தவர். எனவே அவரது குடும்பத்தினர் தற்போது பெரும் அதிர்ச்சியில் நிலை குலைந்து போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications