'ஜனாதிபதி': பிரணாபுக்கும் ஆதரவில்லை, அன்சாரிக்கும் ஆதரவில்லை- மம்தா, முலாயம் அறிவிப்பு!
ஆனால், இந்த இருவரையுமே ஆதரிக்க முடியாது என்று மம்தா பானர்ஜி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் 19ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று டெல்லியில் சந்தித்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் குறித்து பேசினார்.
பிரணாப் முகர்ஜி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் அவரை ஆதரிக்க முடியாது என்று மம்தா ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதே போல இடதுசாரிகளுடன் நெருக்கமாக உள்ள துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியையும் ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டதையடுத்து நேற்று சோனியா காந்தியும் அவரது அரசியல் செயலாளர் அகமத் படேலும் மம்தா பானர்ஜியுடன் தொலைபேசியில் பேசினர்.
இதையடுத்து சோனியாவை மம்தா பானர்ஜி இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மம்தா, காங்கிரஸ் கட்சி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க நினைக்கிறது. அவர்களது முதல் சாய்ஸ் அவர் தான். இரண்டாவது சாய்ஸ் தான் ஹமீத் அன்சாரி. ஆனால், நான் காங்கிரசின் வேட்பாளர் சாய்ஸ் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது என்றார்.
அதே நேரத்தில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறாரா இல்லையா என்பதை மம்தா நிருபர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அவர் ஹமீத் அன்சாரியை ஆதரிப்பதாகத் தெரிகிறது. சோனியா சந்தித்த பின் மம்தா சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்துப் பேசினார். அதில் தான் காங்கிரஸ் கட்சியின் இரு வேட்பாளர்களையும் நிராகரிப்பது என்ற முடிவை முலாயமும் மம்தாவும் எடுத்தனர்.