'ரெய்சினா ஹில்' அப்படிங்கிறாங்களே, அப்படின்னா என்ன?

வெள்ளையர் ஆட்சியின் ஆரம்பத்தில் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தாதான் இருந்து வந்தது. வெள்ளைக்கார அரசாங்கம் தலைநகரை டெல்லிக்கு மாற்ற தீர்மானித்தது. 1911ல் தலைநகராக டெல்லி உருவானது. இதற்காக ஒரு திட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தலைநகருக்குத் தேவையான அலுவலகங்கள், கட்டடங்களை உருவாக்க இடம் பார்த்தது.
தற்போது உள்ள டெல்லி நகருக்கு தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் சற்று உயரமான பகுதியில் தலைநகரின் தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை அமைக்க தீர்மானமாயிற்று. இந்த உயரமான இடம்தான் ரெய்சினா ஹில் என்று அழைக்கப்படுகிறது.
பரந்து விரிந்த இந்த இடம் டெல்லியின் பிற பகுதிகளை விட 741 அடி உயரம் கொண்டது இந்தப் பகுதி. இதனால்தான் இதை 'ஹில்' என்று அழைக்கிறார்கள்.
இந்த பகுதியில்தான் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் வசிக்கும் ராஷ்டிரபதி பவன் அமைந்துள்ளது. இதனால்தான் குடியரசுத் தலைவர் மாளிகை தொடர்பான செய்திகளின்போது ரெய்சினா ஹில்லை அலங்கரிக்கப் போவது யார் என்று கூறுகிறார்கள்.
குடியரசுத் தலைவர் மாளிகையைத் தவிர பிரதமரின் அலுவலகம் மற்றும் அதிகாரப்பூர்வ இல்லம், மத்திய அரசின் தலைமைச் செயலக கட்டடம், அமைச்சர்களின் அலுவலகங்கள் ஆகியவை இணைந்த பிளாக் உள்ளது.
மேலும் நாடாளுமன்றம், ராஜ்பாத், விஜய் செளக், இந்தியா கேட் உள்ளிட்டவையும், பல முக்கிய அரசு அலுவலகங்களும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட முக்கியமான இடம்தான் ரெய்சினா ஹில்.












Click it and Unblock the Notifications