ஜனாதிபதி தேர்தல்... தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ ஓட்டின் மதிப்பு 176!
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தொடங்கி விட்டன. எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் ஓட்டு போடுவதற்காக சட்டசபை அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகின்றன.
ஜூலை 19ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வேட்பாளர் யார் என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆளாளுக்கு குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.
எம்.பிக்களைப் பொறுத்தவரை டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் ஓட்டளிப்பார்கள். எம்.எல்.ஏக்கள் தத்தமது மாநில சட்டசபை வளாகத்தில் ஓட்டுப் போடுவார்கள்.
நியமன எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடையாது. தமிழக எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன. இந்தப் பணிகளை தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மேற்பார்வை பார்த்து செய்து வருகிறார்.
ஓட்டுச் சீட்டு முறைப்படிதான் வாக்குப் பதிவு நடைபெறும். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு 176 ஆகும். தமிழகத்தில் மொத்தம் 234 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நாளை தேர்வாகும் புதுக்கோட்டை தொகுதி புது எம்.எல்.ஏவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிப்பார்.
எம்.எல்.ஏக்கள் மட்டுமல்லாமல், எம்.பிக்களும் கூட முன் அனுமதி பெற்று சென்னையிலேயே வாக்களிக்கலாம்.












Click it and Unblock the Notifications