நாளை புதுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை,, காலை 7.45 முதல் 'லைவ்'!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது. பிற்பகல் வாக்கில் முடிவு முழுமையாக தெரிந்து விடும்.
புதுக்கோட்டை தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முத்துக்குமரன் எம்.எல்.ஏவாக இருந்து வந்தார். இவர் ஏப்ரல் 1ம் தேதி எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இதையடுத்து ஜூன் 12ம் தேதி இங்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
இந்த இடைத் தேர்தலில் மொத்தம் 1,43,277 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது 73.48 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இத்தேர்தலி்ல அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் ஜாகிர் உசேனும் போட்டியிட்டுள்ளனர். மற்றவர்கள் சுயேச்சைகள் மற்றும் குட்டிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
திமுக, பாமக, பாஜக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவில்லை, ஒதுங்கிக் கொண்டன.
இந்த நிலையில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை காலை எண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அவை நாளை காலை 8 மணிக்கு திறந்து எண்ணப்படும்.
200 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பிற்பகல் 1 மணியளவில் முடிவு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நடைபெற்ற 3வது இடைத் தேர்தல் இது. இதற்கு முன்பு திருச்சி மேற்கு மற்றும் சங்கரன்கோவிலில் இடைத் தேர்தல் நடந்தது. இரண்டிலும் அதிமுகவே வென்றது நினைவிருக்கலாம்.
நாளைய வாக்கு எண்ணிக்கையை உங்கள் ஒன் இந்தியா தமிழ் இணையத்தளத்தில் காலை 7.45 முதல் காணலாம்.