மைசூர் சிறையில் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருக்கிறார் நித்தியானந்தா!
பிடதி ஆசிரமத்தில் ஏற்பட்ட மோதல் மற்றும் பாலியல் புகார் வழக்கில் கைதாகி ஒரு நாள் ராம்நகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்த நித்தியானந்தாவுக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் நேற்று ஜாமீன் அளித்தது.
இதையடுத்து கோர்ட்டை விட்டு வெளியே வந்த நித்தியானந்தாவை பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக கூறி போலீஸார் திடீரென கைது செய்தனர். மேலும் அவரை மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீராமரெட்டி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரை ஒரு நாள் மைசூர் சிறையில் அடைக்க ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து மைசூர் மத்திய சிறைக்குக் கொண்டு போய் அவரை போலீஸார் அடைத்தனர்.
இதையடுத்து நேற்று இரவு முதல் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் நித்தியானந்தா. அவர் தியானத்தில் இருப்பதாக கூறியதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று பிற்பகலுக்கு மேல் நித்தியானந்தா வழக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு வருகிறது. அப்போது அவரது சார்பில் வக்கீல்கள் நேரில் ஆஜராகவுள்ளனர். நித்தியானந்தா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.