கலாம் போட்டியிட்டாலும் கவலையில்லை, நானும் போட்டியிடுவேன்-சங்மா

குடியரசுத் தலைவர் தேர்தலில் முதலில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சங்மாதான். தான் தேர்தலில் போட்டியிடப் போவதாக முதலில் அறிவித்தவர் இவரே. உடனே இவருக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கும் குரல் கொடுத்தனர், ஆதரவும் திரட்டினர். ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் மமதா பானர்ஜி இடையிலான மோதலைத் தொடர்ந்து சங்மாவின் பெயர் ரொம்ப தூரத்துக்குப் பின்னால் போய் விட்டது.
தற்போது அப்துல் கலாமின் பெயர் படு வேகமாக முன்னேறி வருகிறது. பிரணாப் முகர்ஜி ஒரு வேளை போட்டியிட்டால் கலாமை நிறுத்த மமதா பானர்ஜி தீவிரமாக முயன்று வருகிறார். அவருக்கு ஆதரவு பெருகும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த சூழ்நிலையிலும் நீங்கள் போட்டியிடும் மன நிலையில்தான் உள்ளீர்களா என்று சங்மாவிடம் கேட்டதற்கு அவர் நிச்சயம் நான் போட்டியிடுவேன் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து விலக மாட்டேன். எனக்குத் தேவையான ஆதரவு உள்ளது. அப்துல் கலாமே போட்டியிட்டாலும் கூட நான் போட்டியிலிருந்து விலக மாட்டேன்.
நான் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிடவில்லை. நாட்டில் உள்ள 10 கோடி பழங்குடியின மக்களின் பிரதிநிதியாக போட்டியிடுகிறேன். இதுவரை யாரும் பழங்குடியின மக்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதில்லை. இதனால்தான் நான் போட்டியிடுகிறேன். எனவே விலக மாட்டேன் என்றார்.
இதற்கிடையே, சங்மாவை போட்டியிலிருந்து விலகக் கோரி தேசியவாத காங்கிரஸ் தலைமை முயற்சிகளில் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் டி.பி. திரிபாதி, சங்மாவை சந்தித்துப் பேசினார். ஆனாலும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக சங்மா கூறி விட்டதாக தெரிகிறது.
தற்போது வேட்பாளர் தேர்வு பெரும் குழப்பமும், சூடும் பிடித்துள்ள நிலையில் சங்மாவுக்கு ஆதரவு தெரிவித்த முதல்வர் ஜெயலலிதாவும், நவீன் பட்நாயக்கும் தற்போது கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications