திண்டுக்கல் அருகே விசாரணைக் கைதி மரணம்: எஸ்.ஐ. உள்ளிட்ட 5 போலீசார் சஸ்பெண்ட்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விசாரணைக் கைதி இறப்புக்கு காரணமான இரண்டு எஸ்.ஐ. உள்ளிட்ட 5 போலீசாரை திண்டுக்கல் எஸ்.பி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
திண்டுக்கல் அருகே கடந்த மே மாதம் 29ம் தேதி கலிக்கம்பட்டியைச் சேர்ந்த ஜான் ஆபிரகாம் என்பவரது வீட்டில் புகுந்த திருடர்கள் ஜான் ஆபிரகாம் உட்பட மூன்று பேரை கட்டிப் போட்டு அவரது வீட்டில் இருந்த பணம், நகை, செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்து விசாரித்த தனிப்படை போலீசார் தி்ருட்டுப் போன செல்போனில் தொடர்பு கொண்ட போது அது செம்பட்டி அருகே செல்லாயிபுரத்தைச் சேர்ந்த மில் தொழிலாளி ராஜா (27) என்பவரிடம் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து குற்றப் பிரிவு எஸ்.ஐ. ரமேஷ்கண்ணா தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜாவை வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர்கள், ராஜாவை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது அவர் இறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து அவரது உடல் வேடசந்தூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடலை உறவினர் வசம் ஒப்படைக்க போலீசார் முயன்றனர். ஆனால் அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் ராஜா மரணத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் விசாரணைக் கைதி இறந்தது தொடர்பாக எஸ்.ஐ. ரமேஷ் கண்ணா, சிறப்பு எஸ்.ஐ. சுப்ரமணி, ஏட்டுக்கள் சிங்கராயர், நடராஜ பெருமாள், முருகானந்தம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஜெயசந்திரன் உத்தரவிட்டார்.