மீண்டும் கைதான நித்தியானந்தா மைசூர் சிறையில் அடைப்பு... இன்று விசாரணை!

பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய நித்தியானந்தாவுக்கு ராமநகர மாஜிஸ்திரேட் கோர்ட் ஒரு நாள் சிறைக் காவல் விதித்தது. இதையடுத்து அவர் ராமநகரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைவாசம் முடிந்ததும் நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு ராமநகரம் மாஜிஸ்திரேட் கோமளா ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து வெளியே வந்த நித்தியானந்தாவை போலீஸார் திடீரென கைது செய்தனர். முதல்வர் சதானந்த கெளடாவுக்கு எதிராக ரூ. 10 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நித்தியானந்தா வழக்குத் தொடர்ந்துள்ளதாக வந்த செய்தியைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தது, உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து இந்த மறு கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். பின்னர் அவர் ராமநகர மாவட்ட ஆட்சித் தலைவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஒரு நாள் மைசூர் சிறையில் அடைக்க ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் நித்தியானந்தாவை மைசூர் சிறைக்கு போலீஸார் கொண்டு சென்று அடைத்தனர்.
இன்று மாலை 3 மணிக்கு மீண்டும் நித்தியானந்தா விவகாரம் ஆட்சித் தலைவர் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின்போது நித்தியானந்தா நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் அவரது வக்கீல்கள் ஆஜராவார்கள்.












Click it and Unblock the Notifications