இளைய ஆதீனமான நித்யானந்தாவை மாற்றும் எண்ணம் இல்லை- அருணகிரிநாதர்
மதுரை: மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை, அப்பதவியில் இருந்து நீக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தாவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பலதரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடைபெற்ற மோதல் தொடர்பாகவும், அமெரிக்க பெண் சீடர் ஆர்த்திராவ் கூறிய செக்ஸ் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் நித்யானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட நித்யானந்தா பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, அவர் அதே பதவியில் தொடருவார். நித்யானந்தாவை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தாவின் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. புனையப்பட்ட பொய் வழக்குகளில் நித்யானந்தா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது நியாயங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, அதற்கான பரிகாரத்தை செய்ய தயாராக உள்ளார்.
எனவே நித்யானந்தா தன் மீதான வழக்குகளை சட்டப்பூர்வமாக சந்தித்து, நிரபராதி என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பார். சைவ வேளாளரான நித்யானந்தா, மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டது திடீர் முடிவு என்றாலும், இந்த முடிவை சிவபெருமான் தான் எனக்கு உணர்த்தினார்.
ரூ.பல கோடி மதிப்பிலான சொத்துக்களை கொண்ட மதுரை ஆதீன மடத்தை நிர்வாகம் செய்யும் திறமை நித்யானந்தாவிற்கு மட்டுமே உள்ளது என்று இறைவன் எனக்கு உணர்த்தினார். இறைவன் கொடுத்த கட்டளையின் பேரில் தான் நித்யானந்தா 293வது இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா, கைது செய்யப்பட்டதால் அவரது பதவியில் இருந்து மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை. கைது செய்யப்பட்டதால் அவரை குற்றவாளி என்றும் கூற முடியாது. மதுரை இளைய ஆதீனம் நியமனத்தில் இருந்து நான் பின்வாங்கமாட்டேன்.
ஆதீன மடத்தில் நான் வழக்கம் போல பூஜைகளை செய்து வருகிறேன். நித்யானந்தாவின் சீடர்களும் ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நித்யானந்தாவின் மீது களங்கம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து அவர் மீண்டு வந்து, மதுரை இளைய ஆதீனமாக மீண்டும் செயல்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.