தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடையவர் நெல்லையில் கைது
நெல்லை: நெல்லையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்புடைய ஷேக் முகமது புகாரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பேட்டை எம்.பி.ஜி. சன்னதி தெருவைச் சேர்நதவர் அப்துல் கபூர். தமிழ் மாநில முஸ்லிம் லீக்கின் மாநில அமைப்பு செயலாளர். அவர் கடந்த மே மாதம் 16ம் தேதி நெல்லை நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு ரகுமத் நகருக்கு டூவிலரில் சென்றுள்ளார். அப்போது எதிரே ஹெல்மட் அணிந்து வந்த ஒரு கும்பல் அவரை தாக்கியது. இதில் காயமடைந்து கீழே விழுந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் அவர் நெல்லை மாநகர கமிஷனர் கருணாசாகரை சந்தித்து புகார் அளித்தார். அதில், தான் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும், அதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும், ரகுமத் நகர் தாககுதல் சம்பவத்தைத் தொடர்ந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கமிஷனர் உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அப்துல் கபூரை தாக்கிய வழக்கு தொடர்பாக இன்று அதிகாலையில் மேலப்பாலையம் வடக்கு தைக்கா தெருவைச் சேர்ந்த ஷேக் முகமது புகாரி என்ற கிச்சன் புகாரியை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ஜெயசேகரன் அடங்கிய போலீஸ் படை கைது செய்து பாளை சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்ட கிச்சன் புகாரி தடை செய்யப்பட்ட இயக்குத்தினருடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மீது அச்சன்புதூரில் வெடிமருந்துகள் வாங்கிய வழக்கு, மேலப்பாளையத்தில் மதார் என்பவரை ஆட்டோவில் கடத்திய வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.