கொச்சி- மங்களூர் எரிவாயு திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு: ஜெ. தலையிட கோரிக்கை
சென்னை : கொச்சி - மங்களூர் இடையேயான எரிவாயு குழாய் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயாலளர் பெ.சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது
கொச்சின் - மங்களூர் எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம் தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக நிறைவேற்றப்பட உள்ளது.
இக் குழாய் பதிப்புக்காக மேற்சொன்ன ஏழு மாவட்டங்களில் 136 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பயன்படுத்திக் கொள்வது என கெயில் இந்தியா நிறுவனம் முடிவு செய்து பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
குழாய் பதிக்கப்படும் இடத்திலிருந்து இரு புறமும் தலா 10 மீட்டர் என்ற வகையில் 20 மீட்டர் அகலத்திற்கு நிலத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்த இடத்தில் மரம் நடுவது, வேறு கட்டுமானப் பணிகள் மேற்கொள்வது,குழாய் கிணறு அமைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
இந்த குழாய்கள் மற்றும் சாதனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நில உரிமையாளரே பொறுப்பு என்றும் அவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்தும் சிறை தண்டனை அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
இதனால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தங்களது நிலத்தை மட்டுமே பாதுகாப்ப முடியும். எரிவாயு குழாய்களை பாதுகாக்க முடியாது.
எனவே, தாங்கள் உடனே தலையிட்டு, விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை மாற்றி தேசிய நெடுஞ்சாலை ஓரம், ரயில் பாதை ஓரங்களில் என மாற்று வழியில் இந்த நிறைவேற்ற மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications