ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் புதிய அணி உருவாக்கலாமே: பாஜகவின் தேர்தல் கணக்கு

டெல்லியில் பாஜக தலைவர் நிதின் கத்காரி வீட்டில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்பு உள்ள வாய்ப்புகள் குறித்து அலசப்பட்டது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டுள்ளார். பாஜகவும் அவரை ஆதரிக்கும் என்றே முதலில் பேசப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி தமது கூட்டணியின் பலத்தை விரிவுபடுத்திக் கொண்டு மக்களவைத் தேர்தலை சந்திக்கலாம் என்று பாஜக கணக்கிடுவதாக தெரிகிறது.
மமதா பானர்ஜி
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு ஏற்கெனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கியக் கட்சி. திரிணாமுல் காங்கிரஸ் இப்பொழுது அப்துல்கலாமை வேட்பாளராக முன்னிறுத்துகிறது. ஆனால் அப்துல்கலாம் போட்டியிடுவாரா என்ற சந்தேகம் இருக்கிறது. அப்படி அப்துல்கலாம் போட்டியிட முன்வராத நிலையில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்து நிற்கும் வேட்பாளரை ஆதரிப்பது அல்லது குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவை அக்கட்சி மேற்கொள்ளக் கூடும் எனத் தெரிகிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸை அரவணைத்துக் கொண்டே குடியரசுத் தலைவர் தேர்தலை எதிர்கொள்ளவே பாஜக திட்டமிடும். இந்த அணிசேர்க்கையானது 2014 நாடாளுமன்ற தேர்தலுக்குக் கை கொடுக்கலாம் என்பதுதான் பாஜகவின் எண்ணம்
ஜெயலலிதா, நவீன் பட்நாயக்
மமதாவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதைப் போல்தான் அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் கட்சிகளையும் பாஜக பார்க்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவின் அறிவிக்கப்படாத நட்பு கட்சியாகவே இருந்து வருகிறது. அண்மையில் சென்னை வந்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஜெயலலிதாவை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அதிமுக மற்றும் பிஜூ ஜனதா தளம் ஏற்கெனவே பி.ஏ.சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இதில் சங்மாதான் வேட்பாளர் என்பதில் பிஜூ ஜனதா தளம் உறுதியாக இருக்கிறது. அத்வானியின் சென்னை வருகைக்குப் பிறகு அதிமுக மெளனமாகவே இருந்து வருகிறது. இதனால் சங்மாவை பாஜக ஆதரிக்குமா? என்ற கேள்வியும் எழும்பியது. சங்மாவை ஆதரிப்பதன் மூலம் மமதாவையும் ஆதரிக்க வைத்துவிட்டால் குடியரசுத் தலைவர் தேர்தல் மூலமாக தமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 3 மாநிலங்களில் அதாவது தமிழகம், ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் நல்ல வலுவான கூட்டணி அமைந்துவிடும் என்பது ஒரு கணக்கு.
ஐக்கிய ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கின்ற ஒரு கட்சி ஐக்கிய ஜனதா தளம். ஆனால் அண்மையில் நரேந்திர மோடி தெரிவித்த கருத்தால் இந்த உறவில் விரிசல் உருவாகத் தொடங்கியிருக்கிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கக் கூடாது என்பது பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களில் ஒருவருமான நிதிஷ்குமாரின் கருத்து.
இதேபோல் அப்துலகலாமை ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தை மற்றொரு கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளமும் வலியுறுத்தியது. அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் பதவியை தங்களது கட்சித் தலைவர் பிரகாஷ் சிங் பாதலுக்கு பாஜக பெற்றுத் தரும் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறது.
ஆக பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் சரி, இணைத்துக் கொள்ளலாம் என்ற நெருக்கமான நிலைப்பாடுள்ள கட்சிகளும் சரி ஒட்டுமொத்தமாக பிரணாப்பை ஆதரிக்காமல் இருக்க வேண்டும் என்பதும் அவரை எதிர்த்து வேட்பாளர் ஒருவரை நிறுத்தியாக வேண்டும் என்பதும் பொதுநிலைப்பாடாக இருக்கிறது.
இதனால் தோற்றாலும் பரவாயில்லை ஒன்று வேட்பாளரை நிறுத்துவது அல்லது பிரணாப்புக்கு எதிரான வேட்பாளரை ஆதரிப்பது என்ற நிலைக்கே பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி வரக்கூடும். குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றாலும்கூட அதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலை வலுவான கட்சிகளின் அரவணைப்போடு எதிர்கொள்ளலாம் என்பதுதான் நேற்றைய பாஜகவின் உயர்நிலைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications