செத்துருவேன்... 13 வயது மாணவியிடம் 'காதல் பிச்சை' கேட்ட 15 வயதுப் பையன் கைது!!
பண்ருட்டி: நீயில்லாமல் நான் இல்லை, நீ மட்டும் என்னைக் காதலிக்காவிட்டால் செத்துப் போய்டுவேன் என்று 13 வயது மாணவியின் கையைப் பிடித்து கலாட்டா செய்த 15 வயது மாணவனை, மாணவியின் உறவினர்கள் பிடித்து சரமாரியாக அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த 'காதல் பிச்சை' விவகாரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அந்த 13 வயது மாணவி, அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கூலி வேலை பார்த்து வருகிறான். இவனுக்கு அந்த மாணவி மீது காதல் வந்துள்ளது.
அந்த மாணவியின் செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு கடந்த 2 மாதமாக தொடர்ந்து போன் பேசி, என்னைக் காதலி என்று கூறி அணத்தி வந்துள்ளான்.
இதுகுறித்து தனது குடும்பத்தாரிடமும், உறவினர்களிடமும் மாணவி கூறியிருந்தார்.இருப்பினும் அந்த சிறுவனின் தொல்லை நின்றபாடில்லை. இந்த நிலையில், அந்த மாணவி பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்த கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி காதல் வசனம் பேசியுள்ளான் அந்த சிறுவன். நீ மட்டும் என்னைக் காதலிக்காவிட்டால் செத்துப் போய் விடுவேன் என்று அவன் பேசினான்.
அப்போது அங்கு வந்த மாணவியின் உறவினர்கள் அந்த சிறுவனைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாரிடம் கொண்டு போய்
ஒப்படைத்தனர். போலீஸார் சிறுவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.