டெங்குவையடுத்து கடையநல்லூரை உலுக்கும் வாந்தி- பேதி: 2 பெண்கள் பலி
கடையநல்லூர்: கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து வாந்தி-பேதிக்கு 2 பெண்கள் பலியாகினர்.
கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பரவிய டெங்கு காய்ச்சல் தமிழகத்தையே உலுககி எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தென்மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்ததால் தற்போது டெங்கு காய்ச்சல் ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது.
டெங்கு காய்ச்சல் தாக்கம் தணிவதற்குள் கடையநல்லூரில் வாந்தி-பேதிக்கு இரண்டு பெண்கள் பலியாகினர். கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வலையர்குடியிருப்பு முருகன் தெருவைச் சேர்ந்தவர் ராக்குமுத்து மனைவி மாடத்தி. அவர் கடந்த 5 நாட்களாக வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இறந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ராக்கம்மாள். கடந்த இரு நாட்களாக வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட அவர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் வாந்தி-பேதியால் கடையநலலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications