புதுவையில் பிரணாப் முகர்ஜிக்கு 30க்கு 25 கிடைக்கும்!
புதுச்சேரி: புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 எம்.எல்.ஏக்களில் 25 பேரின் ஆதரவு கிடைக்கும் நிலை உள்ளது. அதிமுகவைச் சேர்ந்த 5 பேர் மட்டும் கட்சி மேலிட உத்தரவுக்கேற்ப வாக்களிப்பார்கள்.
புதுச்சேரியில் மொத்தம் 30 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில் 15 பேர் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸுக்கு 7 எம்.எல்.ஏக்களும், அதிமுகவுக்கு 5 பேரும், திமுகவுக்கு 2 பேரும் உள்ளனர். வி.எம்.சி.சிவக்குமார் சுயேச்சை உறுப்பினராக உள்ளார். இவர் என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவானவர்.
இவர்களில் காங்கிரஸ் மற்றும் திமுகவின் வாக்குகள் பிரணாபுக்கே போகின்றன. அதிமுக மட்டும் பிரணாப்ப்பை ஆதரிக்காது என்பது தெளிவானது.
இந்த நிலையில் ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் என்.ரங்கசாமி, ஆரம்பத்தில் காங்கிரஸ்காரர். அவரை கட்சித் தலைமைதான் ஒதுக்கி வைத்து ஓரம் கட்டியது. இதனால் அதிருப்தி அடைந்துதான் அவர் தனிக் கட்சி தொடங்கினார். மிகப் பெரிய வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார்.
இருந்தாலும் அவர் காங்கிரஸுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசியதில்லை, தனது அலுவலகத்தில் கூட சோனியா காந்தியின் புகைப்படத்தை இன்னும் தொங்க விட்டிருக்கிறார்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் புதுச்சேரி நிர்வாகம் உள்ளது. எனவே மத்திய அரசை பகைத்துக் கொண்டால் சங்கு ஊதி விடுவார்கள். ஒரு நிதியும் தர மாட்டார்கள். எனவேதான் காங்கிரஸையும், மத்திய அரசையும் பகைத்துக் கொள்ள ரங்கசாமி விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவேதான் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவு அளிக்க ரங்கசாமி கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரியைப் பொறுத்தவரை ஒரு எம்.எல்.ஏவின் ஓட்டு மதிப்பு 33 மட்டுமே. எனவே இந்த குட்டி மாநிலத்திலிருந்து கிடைக்கும் ஓட்டுக்களின் மதிப்பு 990 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.